Monday, August 10, 2009

இந்தியா எனும் பூந்தோட்டம் எங்களுடையது!!
எழுங்கள்!
கிழக்கின் அடிவானில்
இருள் கப்பிக் கொண்டுள்ளது.
கனல் பறக்கும் நம் குரலால்
தூங்கும் சபையில் விளக்கேற்றுவோம்.
உன் முன்னே
அடர்ந்திருக்கும் இருளை அகற்று
கிழக்கிலிருந்து தோன்றும் சூரியனைப் போல் எழு!
நேற்றும் இன்றும் கதையாக கழிந்து விட்டன
நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு!!
போன்ற கனல் பறக்கும் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் புகழ்ப்பெற்ற கவிஞர்களில் ஒருவர்.

இந்தியத் திருநாடு ஈன்றெடுத்த அந்த தவப் புதல்வர் கவிஞர் மட்டுமா? மிகசிறந்த தத்துவ ஞானி, அரசியல் மேதை, வழக்கறிஞர், சிந்தனையாளர் எனப் பல்வேறு தளங்களில் வலம் வந்த அந்த எழுத்துப் போராளி, தனது முதிர்ந்த சிந்தனையில் விளைந்த கருத்துக்களை கவிதை வடிவில் எழுதி அவற்றை மக்கள் மன்றத்தில் வைத்தார். வெள்ளை ஏகாதிபத்தியம் இந்திய நாட்டை அடிமைப்படுத்திய காலத்தில் தன் நாட்டையும், தான் பிறந்த மண்ணையும் நினைத்து ஆழ்ந்த கவலைக் கொண்டு, தனது கருத்துக்கள் மூலம் மக்கள் விழிப்புணர்வும், எழுச்சியும் பெறவேண்டும் என்பதற்காக ஏராளமான கனல் பறக்கும் வைர வரிகளை தனது அறிவாற்றலின் மூலம் செதுக்கி, அவை மக்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடலாக எழுதி வெளியிட்டு, இந்திய திருநாடு வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் பெற வேண்டும் என்ற சுதந்திர தாகத்தை மக்கள் மனதில் விதைத்த பெருமை அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களையே சாரும்.

விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய அல்லாமா இக்பால் 1873 பிப்ரவரி 22 இல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவர். ஒருநாள் பள்ளிக்கு தாமதமாக செல்ல ஆசிரியரோ அவரிடம் "நீ ஏன் தாமதமாக வந்தாய்? எனக் கேள்வி கேட்டார். அதற்கு இக்பால் அவர்களிடமிருந்து வந்த பதிலோ வித்தியாசமாக இருந்தது. ஆசிரியரையே வியப்பில் ஆழ்த்தி விட்ட அந்த பதில் என்ன தெரியுமா? "இக்பால் எப்போதுமே தாமதமாகத் தான் வரும்" என்று சொல்ல இந்த இளம் வயது மாணவரின் புத்தி கூர்மையை வியந்து பாராட்டி அவரை தட்டி கொடுத்து அனுபினாரம் ஆசிரியர்.

உண்மைதானே!
இக்பால்(புகழ்) என்பது உடனே கிடைக்கும் கடை சரக்க என்ன? அது மெதுவாகத்தானே வரும். என்ற சிந்திக்க தூண்டும் அவரதுக் கருத்துக்கள் படிப்போரை வியப்பில் ஆழ்த்தி விடும்.
மௌலான அபுல் அலா மௌதுதியின் சந்திப்பு அல்லாமா இக்பால் அவர்களின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவரது கவிதைப் பயணம் ஆன்மிக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது. மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் அவர்கள், நாடு போற்றும் கவிஞராக இளம் வயதிலேயே உயர்ந்து விட்ட அவர், இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியினை தொடர்ந்து செய்த அவரது படைப்புகளில் இச்சையைத் தூண்டும் விதமான கீழ்த்தரமான கருத்துக்களை எந்த இடத்திலும் காண முடிவதில்லை.

புகழுக்கும், வார்த்தை ஜாலங்களுக்கும் ஆசைப்படாத அவர் தனது படைப்புகளில் எந்த இடத்திலும் விரசத்தை நுழைத்ததாகத் தெரியவில்லை. ஏழைகளை வதைப்போரை சாடுபவரகவும், இளைஞர்களின் எதிர்காலம் பற்றி அறிவுரைகள் வழங்குபவராகவும், தாய்மையை போற்றுபவராகவும் விளங்கிய அவர் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தால் அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியா மீட்க்கப்பட வேண்டுமென ஆர்பரித்தார். நாட்டை மீட்க போர்க்களதிற்கு திரண்டு வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்த இக்பால்.

அரபு தேசத்தைப் பற்றி குறிப்பிடும்போது "கிரேக்கர்களை பிரமிக்க வைத்த நாடு, உலகிற்கு அறிவையும், தொழிலையும் தந்த நாடு. இறைவனால் பொன்னாக்கப்பட்ட நாடு. மேலாடைகளை ரத்தினங்களால் நிரப்பிய நாடு. பாரசிக வானில் கவிஞர்களை பிரகாசிக்க செய்த வானத்தையுடைய நாடு. அதிபர் முஹம்மது நபி அவர்களுக்கு குளிர்ந்த தென்றலை அளித்த நாடு". என்றார்.

இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "ஸாரே ஜகான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.

உலகத்தில் சிறந்தது
எங்கள் இந்த தேசம்.
இந்த பூந்தோட்டம்
எங்களுடையது......... என நீண்டு செல்கின்றன பாடல் வரிகள்.

ராணுவத்தின் முழக்கமாக விளங்கும் இந்தப் பாடலின் வரிகள், இந்தியாவின் சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மட்டும் மக்களின் காதுகளுக்கு எட்டும். அவை நாள்தொறும் நாட்டில் ஒலிக்கப்பட வேண்டும். நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த சமுதாயத்தின் வாரிசுகளின் மனதில் உண்மையான வரலாறு விதைக்கப்பட வேண்டும்.
நாளைய வரலாற்றை எழுதுவது
நாமாக இருக்க வேண்டும்.
நேற்றும் இன்றும்
கதையாக கழிந்துவிட்டன.
நாளை உதயமாவதை
எதிர்பார்த்திரு!

என்ற அல்லாமா இக்பால் அவர்களின் கவிதை வரிகள் உயிரோட்டம் பெற வேண்டும்.

Wednesday, February 11, 2009

முடிந்த ஆண்டு உருது கவிஞரான உலகக் கவிக் கோமான் அல்லாமா இக்பாலின் நூற்றாண்டாகும்.

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1871 ஆம் ஆண்டு நவம்பர் 9 தேதி சியால் கோட் என்ற இடத்தில் ஒரு ஏழை தையல் காரனின் மகனாக பிறந்தார் அல்லாமா இக்பால் அவர்கள்.

இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள்: இரண்டு சகோதரர்கள். வீட்டில் கடும் வறுமை. இளமையும் வறுமை.

படிப்பில் ஆர்வமானவரான இக்பால் கல்லூரியை எட்டி பிடித்தார். படிப்படியாக பட்ட படிப்பில் முன்னேறிய இவர் பி.ஏ - எம்.ஏ பட்டங்களை வெகு சுலபமாக பெற்றுக் கொண்டார். பின்னர் தத்துவத்தில் டாக்டர். பட்டத்தையும் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பில் நுழைந்து பார்-அட்-லா என்ற (சட்ட நிபுணர்) பட்டத்தையும் பெற்றார்.

இவை தான் இக்பால் அவர்களின் சுருக்கமான இவரது வரலாறாகும்.

இவைகளல்ல நாம் இக்பால் அவர்களை ஞாபகப்படுத்தி போற்றுவதற்குரிய காரணங்கள்.

மாபெரும் மக்கள் கவிஞராக அவர் முகிழ்ந்து தான் அவரை இன்றும் உலகில் கோடானு கோடி மக்கள் மதித்து போற்றுவதற்குரிய அடிப்படையாகும்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மிக சிறந்த கவிஞர்களில் இக்பாலும் ஒருவர். இந்த நூற்றாண்டு கடமை பட்டுள்ள கவிஞர்களில் இவரும் முக்கியமானவர்.

உழைக்கும் மக்களுக்காகவே அவரது பேனா முனை அசைந்தது. அவர் பாடுபடும் மக்களின் பக்கம் வலுவாக காலூன்றி நின்று கொண்டுதான் உலகத்தை பார்த்தார். தனது கவிக் குரலை வானம்பாடிக் கீதமாக்கினார். உலகப் பாட்டாளி வர்க்கத்தை ஒரு சேர நோக்கி கீதமிசைத்தார்.

அவரிடம் மத உணர்ச்சி இருந்தது. அந்த மத உணர்ச்சியில் எந்தவிதமான குறுகிய தன்மைகளும் - தனிமைப்படும் போக்குகளும் காணப்படவில்லை.

குரான் தொழிலாளிகளுக்கு உற்ற நண்பன்!
முதலாளிகளுக்குச் சாவு மணி!!
என துணிந்துரைதவர் இக்பால்.

கவிதைத் துறையிலும் சரி, பொதுவாழ்விலும், மத வாழ்கையிலும் சரி குறுகிய எண்ணங்கள், மனப்பான்மைகள் அவரிடம் கிஞ்சித்தும் இருந்தது இல்லை. தன்னிடம் அப்படி இருக்க அவர் அனுமதிக்க வில்லை.

இக்பாலுக்கு முன்னுள்ள உருது கவிஞர்கள் சகலரும் நமது பாரதி காலத்து மரபுக் கவிஞர்களை போல பெண்ணையும், விண்ணையும், மலரையும், தென்றலையும், சூரியனையும், சந்திரனையும் பாடிக் கொண்டிருந்தனர். தமது கவிதைக்குக் கவிப் பொருளாக இவைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

பாரதியை போல், இக்பால் அவர்களும் பாமர மக்களைப் பாடினார். சுரண்டப்பட்ட, அடிமைபடுத்தப்பட்ட மனித சனங்களைப் பற்றி கவிபொருள் செய்தார்.

"ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி!" என அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ரஸியா வில் நடைபெற்ற அந்த மாபெரும் சோவியத் புரட்சிப் பற்றி முதன் முதலில் இனங் கண்டு பாடியவன்-கவிகுரல் எழுப்பியவன்- பாரதி. தமிழ் கவிஞனாக இருந்த போதிலும் கூட, உலக நிகழ்வை பற்றி வெகு திறமையாக, கூர்மையாக இனங் கண்டார். அக்கவிஞன்.

இந்தப் புரட்சி பற்றிச் சரியான கணிப்புடன் இனங் கண்டு பாடிய இந்திய கவிஞர்கள் வெகு சிலரே. அவர்களில் அல்லாமா இக்பாலும் ஒருவர்.

மகா கவிஞர்கள் ஒரு சகாப்தத்தின் தீர்மானமான குரலை ஒலிப்பவர்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துகாட்டு. தீர்கதரிசனத்துடன் மனித குலத்துக்கு சோவியத் புரட்சிப் பற்றி எடுத்துக் கூறினார்.

கம்பீரமான வார்த்தை பிரயோகங்கள், உலக அன்புத் தத்துவம், மானுட மதிப்பின் மீது அசையாத பக்தியும் உழைக்கும் வர்கத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் கொண்ட கவிஞர், மனிதன் மீதும் - மனிதன் செயல்கள் மீதும் எதிர்கால நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவருடைய கவிதை மொழி இது:

மனிதா! நீ ராஜாளிப் பறவை.
ஓய்வரியாப் போராட்டத்தில் மேலே....மேலே...
முன்னேறி செல்!


(1978 ஆம் ஆண்டு ஜனவரி மல்லிகை இதழில் வெளியான கட்டுரை)